In a significant event for the sustainable tourism sector, a Q&A media session featuring prominent Environment and Development Global Leader Erik Solheim, is set to take place on January 25, 2026. The theme of the discussion is “Achieving Profitability through Sustainable Tourism”. The symposium is hosted by Thema Collections in collaboration with the Sustainable Tourism…
ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வருடாந்த அறிக்கைகள் பரிசீலனை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு வியாழக்கிழமை (13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த ஊடக வலையமைப்பின் பிரதானிகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் குழுவில் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கு அமைய, அந்த ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 164 மில்லியன் ரூபாவைத் தாண்டிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நட்ட நிலையை படிப்படியாகக் குறைத்து, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வருடங்களாக அறவிடப்படவுள்ள, நிறுவனத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை அறவிடுவது சிறந்த மட்டத்தில் இருப்பதாக அவர்கள் குழுல் தெரிவித்தனர்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை அதிக விலைக்கு வாங்கியமை மற்றும் அந்தத் தொடர்களுக்கு மேலும் செலுத்த வேண்டிய பணம் குறித்துக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அததுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் குழுவுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் குழுவில் பரிசீலிக்கப்பட்டது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நிலைமை உட்பட அதன் செயற்பாடுகள் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
தற்போது அவர்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் 48% அபராதத்துடன் செலுத்த வேண்டிய வரிகள் என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் மிகவும் பழமையான நிலையில் உள்ளதாகவும், சில மின் உபகரணங்களை ஊழியர்கள் உயிர் ஆபத்துடன் இயக்குவதாகவும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணிக்கான உரிமை இன்னும் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு காணியின் உரிமை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

