அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி வழங்கியது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் மிகப்பெரிய வீரர்களை போன்று பேசினர். அவர்கள் இன்று உயிரோடு இல்லை.

ஈரான் ராஜ்ஜியம் நிலைத்திருக்க வேண்டும். இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. எனினும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம். இதுதொடர்பாக அமெரிக்காவின் மூத்த தளபதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.

60 நாட்களுக்குள் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நாடு கையெழுத்திடவில்லை. இன்று 61-வது நாள். ஈரானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொண்டால் நல்லது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

One thought on “அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *