நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண முடியாத நிலையில் இலங்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

