நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் போராட்டம்
நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் தெரிவித்து மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) அறிவித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ‘நியாயமான செலவுத் தொகை’ என்ற கொள்கையை சரியாக பின்பற்றியிருந்தால், இந்த உயர்வு சாத்தியமே இல்லை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவை எங்களது சங்கம் வலுவாக எதிர்க்கிறது. எதிர்வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
“மின்சார சபை (CEB) களவாடப்பட்ட, தவறான தரவுகளை பயன்படுத்தி அதிக செலவுகளை சுட்டிக்காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயன்றது.மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நாட்டின் நலனுக்கோ, மக்களின் நலனுக்கோ அல்ல எனவும் இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தால் எடுக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, மின்சார கட்டணத்தை 33% குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் கூட வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

