நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
கடந்த 7ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம், தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று (14.11.2025) வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அதன்படி, 118 வாக்குகளுடன் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வாக்கெடுப்பில் 42 உறுப்பினர்கள், வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இதேவேளை, வாக்கெடுப்பிலிருந்து தமிழரசுக் கட்சி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

