வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு 

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4821 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.   அவ்வாறன விபத்துகளுக்கு ஆளான சுமார் 60 சதவீதமானோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.

கவனயீனம், அவதனம் இன்மை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துதல் ஆகியன உங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கு  பாதகமாக அமையலாம்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சமூகப் பொறுப்பை உணர்ந்து சாரதிகள் வாகனம் செலுத்துவது அவசியம். கவனயீனமாக, மதுபோதையுடன் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் நிலவிவரும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு காலவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மீள புதுப்பித்துக் கொள்வதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு  சாரதிகளுக்கு விசேட நிவாரணக் காலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 25 ஆம் திகதி வரையான ஒருமாத காலப்பகுதியில் சாரதிகள், தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது  என்றார்

One thought on “வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *