Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி…!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம் (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நிலைமையில் மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நன்கு ஒருங்கிணைந்து பணியாற்றி, மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
மேலும், எந்தவித பாகுபாடும் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கி அவர்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த கடினமான நிலைமை, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், மீண்டும் இயல்பு வாழ்வை மீட்டெடுத்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அனைவரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் செயற்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், தமது பங்களிப்புகளைப் பாராட்டி இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற தேசிய சந்தர்ப்பங்களில் அரச சார்பற்ற அமைப்புகளின் நிதி உதவியை மாத்திரமன்றி, அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் இங்கு அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், இது பொருளாதார ரீதியாக நாட்டிற்கு கடினமான நிலைமை என்றாலும், இலங்கையில் நிலவும் தார்மீக விழிப்புணர்வு காரணமாக இந்த சவாலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஊழல் மற்றும் மோசடி அற்ற வேலைத்திட்டத்தின் காரணமாக, அரசாங்கத்துடன் அச்சமின்றி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலருடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.