வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல் பிற்பகலில் வேகம் அதிகரிக்கும்!

டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை வரை மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது.

நேற்றைய தினம்(27) டிட்வா புயலின் மையச்சுழற்சி மணிக்கு 48 கி.மீ. என்ற அளவில் காணப்பட்டது. தற்போது மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் செல்வாக்கினால் புயலின் நகர்விலும் மையச் சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இன்று பிற்பகலில் மீளவும் நகர்வு வேகமும் மையச் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மையம் முழுவதும் நிலப்பகுதியூடாகவே வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை(29 11 2025) நாளை பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்தின் அமபலவன்பொக்கணை பகுதியூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதன் இறுதித் தன்மையை நாளையே(29 11 2025) முடிவு செய்யலாம்.

இதனால் இன்றும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி, பொலன்னறுவை, அனுராதபுரம், புத்தளம், சிலாபம் குருநாகல், கொழும்பு மாவட்டத்தில் மிக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை தொடர்ந்து நிலப்பகுதியின் ஊடாக நகர்ந்து வந்த டிட்வா புயலினுடைய மையம் நாளை கடற்பகுதிக்குள் வெளியேறும்போது வடக்கு மாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மிகக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *