அஸ்வெசும திட்டத் தகவல் சேகரிப்பில் முறைகேடு : ஆயிரக்கணக்கான ஏழைகள் புறக்கணிப்பு – எம்.எஸ். உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு 300 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (21)   இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் இதுவரை அபிவிருத்தி திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களின் ஆலோசனைகளைப் பெற்றே முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக திடீர் என இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு 300 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் வறுமைக்கோட்டில் வாழும் 550 ஏழை மக்கள் அஸ்வெசும திட்டத்தில் தங்களை இணைக்குமாறு பிரதேச செயலாளருக்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.

எனவே, அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல்களை மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கி அது தொடர்பான விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்து அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களை அஸ்வெசும திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சின் துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் தெரிவித்தேன்.

இதேவேளை 19.01.2026 ம் திகதியன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று அவசரமாக வெளியிடப்பட்டு மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும், துறை சார்ந்த திணைக்கள தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றறிக்கையில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள பிரஜா சக்தி இயக்கத்தின் தலைவரையும், செயலாளரையும் அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் குழுக்களில் பார்வையாளர்களாக நியமித்துள்ளதாக சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் வறுமையை ஒழிப்பதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. நான் அட்டாளைச்சேனை கிராமோதய சபையின் தலைவராக 1985ம் ஆண்டில் பதவி வகித்தேன்.

கிராமோதய சபையில் ஊர் தலைவர்கள், கிராம மட்டத்தில் அமைந்துள்ள மார்க்க தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பொதுப்பணிகள் செய்யும் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கிராமோதய சபையின் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் ஆனால் பிரஜா சக்தியின் தலைவரை தெரிவு செய்யும் கிராமத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது இயக்கங்களின் தலைவர்கள் இருக்கத்தக்கதாக, இரகசியமான முறையில் பிரஜா சக்தி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இது ஜனநாயக விரோத செயற்பாடாகும். ஒரு கட்சியின் பிரஜா சக்தியின் தலைவரும், செயலாளரும் அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அமைச்சினால் சுற்று நிரூபத்தினை அவசரமாக அனுப்பியுள்ளது.

அவ்வாறாயின் ஏனைய கட்சிக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்களும் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் பிரதிநிதிகள் யாருமின்றி அஸ்வெசும திட்டத்தை சுதந்திரமாக செயற்படுத்த வேண்டும்  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *