எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவலுக்கான காரணம் வெளியானது

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று மீண்டும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மீனவ சமூகம் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளன. 

கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே மன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். 

இதற்கு அந்த கப்பலின் கப்டன் உள்ளிட்ட பணிக்குழாமினர் மற்றும் அதன் உரிமத்தைக் கொண்ட நிறுவனம் ஆகிய தரப்பினரே பொறுப்பு கூற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

அரசியலமைப்பின் பிரகாரம் தனிப்பட்ட தரப்பினரிடம் நட்டயீடு கோர அடிப்படை உரிமை மனுவில் வாய்ப்பில்லை எனவும் இதற்கான நட்டயீட்டை வழங்குமாறு அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நிதி கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *