செலான் வங்கி, 2026 உலக ஈரநில தினத்திற்கான அகில இலங்கை நிகழ்ச்சித் திட்டத்திற்காக WNPS உடன் கைகோர்க்கிறது

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக செலான் வங்கி, வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) இணைந்துள்ளது. இந்த இணைவு ஊடாக உலக ஈரநிலங்கள் தினத்தின் போது, WNPS அகில இலங்கை நிகழ்ச்சித்திட்டம் 2026இன் Title Sponsor ஆக ஆதரவளிக்கிறது.

இந்த முன்னெடுப்பானது ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் இலங்கை முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிரியல் பல்வகைமையைப் பேணுவதிலும் காலநிலை மாற்றங்களை சீர்படுத்துவதிலும் வெள்ள அபாயங்களைக் கையாள்வதிலும் மற்றும் நீர் வளங்களைத் தக்கவைப்பதிலும் ஈரநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், இச் சூழல் அமைப்புகள், பெருகி வரும் நகர அபிவிருத்தி, மாசடைதல் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் நாடெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தொடர் ஈரநிலக் கல்வித் திட்டங்கள் நடாத்தப்பட்டன. கொழும்பு, ஆனவிலுந்தாவ, யாழ்ப்பாணம், மின்னேரியா, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற இவ் அமர்வுகளில் ஈரநிலப் பாதுகாப்பு குறித்த கல்விசார் விளக்கக்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

இம் மாவட்ட அளவிலான பாடசாலைத் திட்டங்கள் தரம் 8 முதல் 10 வரையிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டன. வகுப்பறைக் கற்றலுடன் அருகிலுள்ள ஈரநிலங்களுக்கான வழிகாட்டப்பட்ட பயணங்களும் இணைக்கப்பட்டதால் இச்சூழல் அமைப்புகளையும் அவற்றின் சூழலியல் மதிப்பையும் குறித்த நேரடி அனுபவத்தை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

கல்வி அமர்வுகளுக்கு மேலதிகமாக இம் முயற்சியில் அகில இலங்கை புகைப்படம் மற்றும் குறும் காணொளிப் போட்டிகளும் இடம்பெற்றன. இதில், படைப்பாற்றல் மிக்க கதைசொல்லல் ஊடாக இலங்கையின் ஈரநிலங்களை காட்சிப்படுத்த பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இளைஞர்கள் அழைக்கப்பட்டனர். இப்போட்டி, ஈரநிலங்களின் சூழலியல் முக்கியத்துவத்தையும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்க பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது.

இந் நிகழ்ச்சித்திட்டம், களச் செயல்பாடுகள் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சென்றடைந்ததுடன், டிஜிட்டல் பங்கேற்பு மூலம் தேசிய அளவிலான ஆர்வத்தை உருவாக்கி, இளைஞர்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆதரவாளர்களாக மாற ஊக்குவித்தது.

இவ் இணைவு குறித்து கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் பொறுப்பான மேலாண்மையையும் ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது வங்கியின் நிலைத்தன்மை செயல்திட்டத்தின் முக்கிய அங்கமாகும். உலக ஈரநிலங்கள் தின நிகழ்ச்சிக்காக WNPS உடன் இணைந்ததன் ஊடாக இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான தேசிய முயற்சிகளுக்குப் பங்களிப்பதையும் அடுத்த தலைமுறையினருக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மேம்படுத்துவதையும் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.

1894 இல் நிறுவப்பட்ட வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், இலங்கையின் மிகப் பழமையான பாதுகாப்பு அமைப்பாகும். இது அறிவியல் அடிப்படையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி முயற்சிகளை ஊக்குவிப்பதில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இக் கூட்டு முயற்சியின் ஊடாக செலான் வங்கியும் WNPSம் ஒன்றாக, ஈரநிலங்கள் குறித்த பொதுமக்களின் புரிதலை வலுப்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்காக இச் சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் எதிர்பார்த்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *