65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு வியட்நாமில் சிறப்பு வரவேற்பு
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை ஜனாதிபதியின் வருகை, இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தருவதுடன், விரிவான இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பிராந்தியத்திலும் உலகிலும் அமைதி, ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் என்று வியட்நாம் தூதுவர் அந்நாட்டு ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்துள்ளார்.

