தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 1ம் திகதி.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் இன்று (மார்ச் 28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன் அறிக்கையில் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் “இன்று (மார்ச் 28) உயர் நீதிமன்றத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

இவ்வழக்கிற்க்காக எமது கட்சி உறுப்பினர்கள் மூத்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் உயர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

யாழ்ப்பாண தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால்
அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்றே வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்காக பதிவுசெய்யப்பட்ட ஒன்பது வழக்குகளும், அதே காரணத்துக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட ஒரு வழக்கும், மன்னார் – மாந்தை பிரதேச சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்ட வழக்கு உட்பட பதினொரு வழக்குகளோடு, வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியை, வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *