நீர் சுத்திகரிப்பு வசதியை வழங்கி பரம்பொல சமூகத்தினரை வலுவூட்டும் பெரேரா அன்ட் சன்ஸ்.

பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம், இலங்கையின் பெருநிறுவனத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான (CSR) மனுமெஹெவர திட்டத்தின் மூலம் நிலைபேறான தன்மை மற்றும் சமூக நல்வாழ்வு தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.

அந்த வகையில், நிறுவனத்தின் சமீபத்திய திட்டத்தின் கீழ், பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள பரம்பொல சமூகத்திற்கு ஒரு அதிநவீன Reverse Osmosis (RO) (எதிர்த்திசை சவ்வூடுபரவல்) கட்டமைப்புத் தொகுதி நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 100 குடும்பங்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீருக்கான அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த RO கட்டமைப்பானது, 2025 பெப்ரவரி 21ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரேரா அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அவிஷ்க பெரேரா, பெரேரா அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பரம்பொல சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், தாம் சேவை வழங்கும் சமூகங்களிடையே நீடித்த சாதகமான தாக்கத்தை உருவாக்குவதற்கும் P&S கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு, இந்த RO கட்டமைப்பு நன்கொடையானது ஒரு சான்றாகும். இந்த திட்டத்தின் மூலம், ஒரு முக்கியமான அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்வதானது, ஐக்கிய நாடுகளின் நிலைபேறான வளர்ச்சி இலக்கின் (SDG) 6ஆவது அம்சமான, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தை பூர்த்தி செய்வதுடன் இணங்குகின்றது. அது மாத்திரமன்றி, P&S இன் பரந்துபட்ட சமூகப் பொறுப்பு முயற்சிகளானவை அதையும் கடந்து SDG 10: சமத்துவமின்மையை குறைத்தல் மற்றும் SDG 12: பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கும் பங்களிக்கின்றன.

இது குறித்து, P&S இன் பணிப்பாளரும் அந்நிறுவன தலைமைத்துவத்தின் ஐந்தாவது தலைமுறை உறுப்பினருமான அவிஷ்க பெரேரா குறிப்பிடுகையில், “P&S நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் பெருநிறுவன சமூகப் பொறுப்பானது அதன் மையமாக விளங்குகின்றது. எமது மனுமெஹெவர திட்டத்தின் கீழ் இந்த RO கட்டமைப்பை நன்கொடையாக வழங்குவதானது, எமது சமூகங்களுக்கு ஆரோக்கியமான, மேலும் நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்துதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சுத்தமான நீரை அணுகுவதை உறுதி செய்வதன் மூலம், பரம்பொலவில் வசிப்பவர்களின் சுகவாழ்வைப் பாதுகாப்பதில் நாம் ஒரு முக்கிய படியை எடுத்திருக்கின்றோம்,” என்றார்.

P&S நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதல் RO கட்டமைப்பு திட்டங்களுக்கு தீவிரமான ஆதரவை வழங்கி வருகிறது. உறுதியான மற்றும் மிகவும் நன்மை பயக்கும் பங்களிப்புகளை சமூகத்திற்கு வழங்குவதன் நிலைபேறான சாதனைப் பதிவை இது எடுத்துக் காட்டுகிறது. இந்த முயற்சியானது, தனது வணிக நடவடிக்கைகளுக்கு அப்பால், சமூகங்களை மேம்படுத்துவதற்கும் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவது தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள நோக்கத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும்.

இலங்கையின் பெருமைமிகு வர்த்தகநாமமான P&S, தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் தான் பெற்றதிலிருந்து மீளக் கொடுப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அது கொண்டுள்ள நெறிமுறைகள் மற்றும் சமூகப் பொறுப்பு முயற்சிகளில் நிலைபேறான தன்மையை இணைப்பதன் மூலம், நிறுவனம் தொடர்ச்சியாக முன்மாதிரியாக இருந்து வருகிறது. சமூகத்தின் நல்வாழ்வையும் தமது நிறுவன இலட்சியங்களையும் முன்னுரிமைப்படுத்தும் பொறுப்பான மற்றும் அக்கறையுள்ள ஒரு வர்த்தகநாமமாக தனது நற்பெயரை பெரேரா அன்ட் சன்ஸ் உறுதிப்படுத்துகிறது.

மனுமெஹெவர உள்ளிட்ட ஏனைய அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டங்கள் மூலம், அவசரமான சமூகத் தேவைகளை P&S தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து வருகிறது. அத்துடன் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சமமான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அது அமைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *