நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை, பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

