65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா
யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.
இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது, உள்ளக விளையாட்டரங்கை சகலரும் பயன்பெறத்தக்க வகையில் மாற்றுவதற்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
எமது பரம்பரைக்கு உரிய கோப்பாயில் உள்ள நிலங்களில் ஒன்றை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு வழங்குவதன் ஊடாக அபிவிருத்திக்கு ஒத்துழைக்க நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஸை சந்தித்து இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளோம்.

