நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (மார்ச் 11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றிலே இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, உணவு உற்பத்திகளுக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும், பாவனைக்குதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



