நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய மத்திய மாநில அரசுகளின் பேச்சு வார்த்தைகளை
தொடர்ந்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் சென்ற மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

