36 மில்லியன் ரூபா சொத்து வழக்கு: பெலியத்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க பிணையில் விடுதலை

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள சொத்துகளை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், வெளிநாடு செல்ல தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

2012 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பெலியத்த பிரதேச சபையின் தவிசாளராக இருந்த காலப்பகுதியில், தனது வருமானத்தை மீறி சொத்துகள் மற்றும் பணத்தை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக சிறில் முனசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டன்வெவ பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் மாம்பழத் தோட்டம் நடத்தி வந்ததாகவும், அந்த காணி போலியான ஆவணங்கள் மூலம் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

One thought on “36 மில்லியன் ரூபா சொத்து வழக்கு: பெலியத்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க பிணையில் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *