டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை யாழில் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் தலைமை அதிகாரி நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவை இன்று (22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.