நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கண்டி-தெஹிவளை மற்றும் கல்முனை-கொழும்பு வழித்தடங்களில் இங்கும் பேருந்துகளே விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் விபத்துக்குப் பின்னர் அந்த வீதியில் மேலும் பல வாகனங்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

