மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நவம்பர் மாதம் புதன்கிழமை 26ஆம் திகதி இடம்பெற்ற குளவித் தாக்குதலில் ஒரு தொழிலாளி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.

அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

குளவிக்கொட்டு சம்பவத்தின்போது நோயாளர் காவு வண்டி கிடைக்காததால் தோட்ட நிர்வாகம் உடனடியாக தோட்டத்திற்கு சொந்தமான லொறி மூலம் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தது.

இருப்பினும்,  தற்காலிக வீதித் தடை காரணமாக  தொழிலாளி பின்னர் முச்சக்கரவண்டி மூலம் கொட்டகலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு அன்றே அவர் வீடு திரும்பினார்.

மறுநாள் 27ஆம் திகதியன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து   தோட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை வழங்கத் தவறிவிட்டதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நோயாளர் காவு வண்டியை இயக்குவதற்குத் சாரதி இருக்கவில்லை என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியது.

இதன் காரணமாக  நோயாளர் காவு வண்டியை  நிரந்தரமாக மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நிறுத்தவேண்டும் என்று கோரி ஒரு நாள் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த விவகாரம் நான்கு தோட்டப் பிரிவுகளுக்கும் தொடர்புடையது என்பதால்  நிர்வாகமானது ஏனைய பிரிவுகளான சாமஸ், பிட்டவீன், லொக்ஹீல்  ஆகிய பிரிவு தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது. அனைவரும் ஒரு மனதாக ஆட்சேபனை தெரிவித்தனர்.

மேலும் அம்புலன்ஸ் வண்டி தொழிற்சாலை வளாகத்திலேயே இருக்க வேண்டும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினர். தொழிற்சாலை வளாகமே பாதுகாப்பானதும்  எளிதில் அணுகக்கூடியதும் 24 மணிநேரக் கண்காணிப்புக்கு உட்பட்டதும் ஆகும்.

இந்த ஒருமித்த கருத்து இருந்தபோதிலும்  சில தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தை ஹற்றன் உதவித் தொழில் ஆணையாளரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றனர். அங்கு நவம்பர் 24 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தன.

இந்தச் சூழ்நிலையில்  தோட்ட நிர்வாக முடிவுகளில் தொழில் அலுவலகம் தலையிட முடியாது என்று தொழில் அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில்  மேஃபீல்ட் தோட்டப் பிரிவைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினர் ஊடகங்கள் மூலம் இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

ஆயினும் கூட  ஏனைய மூன்று தோட்டப் பிரிவுகளும் தொடர்ந்து நிர்வாகத்துடன் முழு ஒத்துழைப்பை வழங்கி செயற்பட்டு வருகின்றனர். மேலும்  நோயாளர் காவு வண்டி தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்படுவதை அவர்கள் ஆதரிக்கின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது

One thought on “மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *