போராட்டங்களுக்கும் நாம் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்காணொளியில் அவர்,

பொலிஸ் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி ஊடகங்களை ஒடுக்கி,  அடக்குமுறை ஆட்சியை உருவாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பிரதான தூண்களில் ஒன்றான  சுயாதீன ஊடகத்துறை மீது கை வைக்க வேண்டாமென  எச்சரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக நாடு. அதன் நான்கு பிரதான தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகங்கள் என்பன முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் பொலிஸாரையும் பாதுகாப்புப் படையினரையும் முன்னிறுத்தி, மக்களின் ஜனநாயக உரிமைகளை பரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, உண்மையை வெளிப்படுத்தும் சுயாதீன ஊடகங்களின் குரலை நசுக்க அரசாங்கம் முற்படுவது பாரதூரமான விடயமாகும்.

சுயாதீன ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் ‘சமநிலை மற்றும் சரிபார்த்தல்’ செயன்முறைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும். ஆனால்,  பொலிஸாரைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. பொலிஸ் திணைக்களத்திலும் கூட  அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. நேர்மையாகவும் பக்கச்சார்பின்றியும் செயற்படும் அதிகாரிகளுக்குப் பதிலாக, அரசியல் தேவைக்காகச் செயற்படுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையினை வழங்கியது ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதற்கே தவிர, சர்வாதிகாரப் போக்கை முன்னெடுப்பதற்கோ அல்லது ஊடகங்களை ஒடுக்குவதற்கோ அல்ல. மக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்க முற்படுவது ஒரு அதிகாரத்துவ ஆட்சியின் ஆரம்பமாகும். இந்த ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.

அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுவதுடன், நீர்கொழும்பு மற்றும் ஹொரண போன்ற பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. வரவு ,செலவுத் திட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கக்கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் மூலம் ஜனநாயகத்தை அரசாங்கம் குழிதோண்டிப் புதைக்கின்றது.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகத் தேவையான அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்க நாம் தயங்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா தனது காணொளியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 thoughts on “போராட்டங்களுக்கும் நாம் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *