நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மண்முனைப்பற்று காணி விவகாரம் : இன அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை – பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்
மண்முனைப்பற்று காணி விவகாரம் தொடர்பில் நீதி மன்ற நடவடிக்கை எடுக்கும்போது இன அடிப்படையை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் எம்.பி தனது கேள்வியின்போது, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அந்த பிரதேச செயலகத்தினர் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதை இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன்.
குறிப்பாக அங்கிருக்கின்ற அரச காணிகளில் வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. ஆனால் அங்கு வாழுகின்ற முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனால் அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க காணி ஆணையாளர் நாயகத்தின் ஊடாக குழு ஒன்றை நியமிக்குமாறு ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

