இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருட நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் தலைமையில் பாராளுமன்றம் அமையப்பெற்று ஒரு வருடத்தின் பின்தான் இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக தெரிவித்த விடயம், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும்; அதற்கான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியலமைப்பு துரிதமாக நடைமுறைக்கு வரும் என்பதே. ஆனால் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று உள்ளது. இது தொடர்பாகவும் நாம் அவரிடம் கேட்டிருந்தோம். அதற்கு ஜனாதிபதி தெரிவித்தார்… “நாங்கள் 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்திவிட்டோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சொற்ப காலங்கள் உள்ளது. ஆனால் நாம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்” என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கினார். எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சொல்லவில்லை.
மாகாணத்தில் இருந்து அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படக் கூடாது என்பது தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் எமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
ஜனாதிபதி அனைத்தையும் செவிமடுத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் எம்முடன் கலந்துரையாடினார். முக்கியமான பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.