தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.

இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது.

இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் பங்குபற்றும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் நேற்றுமுன்தினம் சென்னை சென்றடைந்தனர்.

இந்த அணியில் நர்வின் கனேஷ், ப்ரென்ட் தேவகுமார், சிம்ரன் யோகநாதன், சாருக்க பெர்னாண்டோ, மெத்திக்க ஜயசிங்க, மிந்திக்க விஜேநாயக்க, சஞ்சீவ குலமின, நிமேஷ் பெர்னாண்டோ, பாரத ரணதுங்க, தசுன் மெண்டிஸ், சசிந்து கஜநாயக்க, ருக்ஷான் அத்தபத்து, ஷாரோ பெரேரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் தனது முதலாவது போட்டியில் நேபாளத்தின் டைம்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை இன்றும்(ஏப்ரல் 02) மாலைதீவுகளின் ட்ரெக்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை நாளையும்(ஏப்ரல் 03) பூட்டானின் திம்ப்பு மெஜிக்ஸ் கழகத்தை ஞாயிற்றுக்கிழமையும்(ஏப்ரல் 06) தமிழ் நாடு கழகத்தை திங்கட்கிழமையும்(ஏப்ரல் 07) கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் எதிர்த்தாடவுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட கழகங்களுககு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொழும்பு புல்ஸ் கழகத்தை வெற்றிகொண்டதன் மூலம் தெற்காசிய கூடைப்பந்தாட் சங்க கழக சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற கொழும்பு கூடைப்பந்தாட்டக்
கழகம் தகுதிபெற்றது.

கொழும்பு கூடைப்பந்தாட்ட அணிக்கு “கஜா ஸ்போர்ட்ஸ்” பிரதான அனுசரணை வழங்குவதுடன் உத்தியோகபூர்வ சீருடைக்கான அனுசரணையை “மை கோலா” வழங்க முன்வந்துள்ளமை சிறப்பான விடயமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *