வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தைச் சரி செய்து, பின்னர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளைத் தவிர, வேறு வாக்காளர் அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது குற்றம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கைப் பதிவு செய்யத் தவறியவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 6,48,490 பேர் தகுதி பெற்றனர்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *