Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
உலகையே உலுக்குமளவுக்குப் போராட்டம் நடத்துவோம்! – சுமந்திரன் எச்சரிக்கை
“வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த காரணத்தாலும் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களது காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பழமையான இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படக்கூடாது. இந்த வர்த்தமானி பிரசுரம் உடனடியாக மீளப் பெறவேண்டும் என்று நாங்கள் கூறி இருக்கின்றோம். அப்படி மே மாதம் 28 ஆம் திகதிக்கிடையில் இது மீளப்பெறாவிட்டால், நாங்கள் பாரியதொரு போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்துவோம் என்று ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்.
மே மாதம் 29 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும். இது நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரு கட்சி சார்ந்த நடவடிக்கை என்று எவரும் கருதக்கூடாது. இது எங்களுடைய இருப்பின் மிக முக்கிய கூறாகிய நிலத்தைப் பற்றிய விடயம்.
நிலம் இருந்தால்தான் இனம் தொடர்ந்து இருக்கலாம். ஆகையினால் இது சகலராலும் ஆதரிக்கப்பட வேண்டிய போராட்டம். சகல அரசியல் கட்சிகளுக்கும் நான் அன்பாக விடுக்கின்ற ஒரு வேண்டுகோள், இதில் இணைந்துகொள்ளுங்கள். இது எனது கட்சி நடத்துகின்ற போராட்டமாகக் கருதாமல் நாங்கள் அனைவரும் இணைந்து செய்கின்ற போராட்டமாக இருக்க வேண்டும். பொது அமைப்புக்கள், மக்கள், விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இதில் இணைந்துகொள்ள வேண்டும். ஆகவே, அரசுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
ஆகவே, எதிர்வரும் 29 ஆம் திகதி போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தங்களை நாங்கள் செய்கின்றோம். இது இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கக்கூடிய ஒரு போராட்டமாக இருக்கவேண்டும். ஏனென்றால் இங்கே அரசு இப்ப செய்ய நினைத்திருக்கின்றது மிக மிகப் பாரதூரமான விடயம்.
ஆகையினாலே இது எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்து சகலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நான் அன்பாகக் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.