டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா

‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா

சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு சிறந்த, திறமையான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக அரச சேவையை நவீனமயப்படுத்தல் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். அதன்படி, பழமையான முறைமைகள் மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அரச சேவையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த திட்டத்தை கொழும்பில் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முழு அரச நிறுவன கட்டமைப்புக்கும் படிப்படியாக விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதன்படி, சமூக சக்தி தேசிய வேலைத் திட்டம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகப் பொறிமுறைகளை நவீனமயப்படுத்த 369 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், பிரதேச தகவல் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக நேரடியாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எதிர்காலத்தில் அரச நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்குத் தேவையான நேரடி முதலீட்டின் அளவை அதிகரிக்கவும், இதற்காக வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிதியை ஒதுக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மேலும், சமூக சக்தி தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்துவதற்கு ஏற்ற அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணுதல், ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் மீளாய்வு செய்வது உள்ளிட்ட முகாமைத்துவ நடவடிக்கைகளை டிஜிட்டல் தளம் மூலம் மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் கீழ், அரசாங்கத்தின் கிராமிய மற்றும் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை மிகவும் திறமையாகவும், வெளிப்படையாகவும் மக்களுக்கு நெருக்கமாக செயல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *