இலங்கைத் திரையுலகில் புதிய மைல்கல்: சோன்வே பிக்சர்ஸின் பிரமாண்ட படைப்பு ‘க்ரே’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு!

இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து, படத்தின் சிங்கள மொழி மூலமான போஸ்டரை பிரபல படத்தொகுப்பாளர் கே. எஸ். கண்ணனும், ஆங்கில மொழி மூல போஸ்டரை பிரபல தயாரிப்பாளரும் வர்த்தகருமான செல்லமுத்து ரவீந்திரனும் வெளியிட்டு வைத்தனர்.

இவ்விழா வெறும் போஸ்டர் வெளியீடாக மட்டுமன்றி, மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் அமைந்தது. திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நலிவுற்றிருக்கும் மூத்த கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மூத்த நடிகை ஜெயகௌரி அவர்களுக்கு 50,000 ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இவ்வாறாக சுமார் 25 மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் செல்வின் தாஸ் இதன்போது உறுதியளித்தார்.

இயக்குனர் லீ முரளி இயக்கத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், செல்வின் தாஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இலங்கைத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சன் ராமநாயக்க, உதாரி வர்ணகுல சூர்யா, மிச்சல் தில்ஹாரா ஆகியோருடன் அல்விஸ் கிளின்டன், ஆர்.ஜே நெலு, பானுக பெர்னாண்டோ, கிரிஷான் வினோதன், தர்ஷி பிரியா, பூர்விகா ராஜசிங்கம் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். மேலும், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்தும் பல பிரபல நடிகர்கள் இப்படத்தில் களம் காணவுள்ளதாக இயக்குனர் லீ முரளி தெரிவித்தார்.

தொழில்நுட்ப ரீதியாக மிகுந்த வலுவோடு உருவாகும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் சங்கீ இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இசை அமைக்கப்பட்டிருப்பதாகவும், இது திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் கதிர் இப்படத்தின் காட்சிகளை நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளார்.

இந்நிகழ்வில் சங்கவி பிலிம்ஸ் அதிபர் துரைராசா சுரேஸ், தினகரன் உதவி ஆசிரியர் ஈஸ்வரலிங்கம், சிரேஷ்ட நடிகை எம். எல். ஈஸ்வரி உள்ளிட்ட பல கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சிரேஷ்ட நடிகை ஷாந்தனா அவர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழா, இலங்கைத் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *