As the Guinness World Record Attempt for the World’s Longest Sensory Board gets closer, Dr Anton James, Director ofThe Tree House International and Founder of Merak has been travelling from the North to the South of the island, conducting community centric Autism awareness programmes. Reaching out to parents, teachers and community workers, particularly in traditionally…
TikTok-ஐ ரமழான் உணவு மேசையாக மாற்றிய ஜஸ்லா இஸ்மத்: பாரம்பரியமும், சுவையும் இணைந்த ஒரு பயணம்
உணவு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் ஒரு பொருள் மட்டுமல்ல, அது மனித உடலை குணப்படுத்தி, ஆன்மாவிற்கு ஆறுதலளித்து, சமூகங்களை அமைதி வழியில் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்குமானால், ஜஸ்லா இஸ்மத் நிச்சயம் அந்த “உணவுக்கான ஐக்கிய நாடுகளின்” தலைவராக இருப்பார். இந்த அழகிய ஆனால் முழுமையற்ற உலகில், ஜஸ்லா மிகுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் பகிர்ந்து கொள்ளும் சமையல் குறிப்புகள், நமது அன்றாட வாழ்வில் ஒரு சிறிய மகிழ்ச்சியைத் தருகின்றன.
TikTok தளத்தில் அவரது ‘ஜஸீ’ஸ் ரெசிபிஸ்’ (Jazee’s Recipes) பக்கம் இன்று ஒரு அன்பான மற்றும் வரவேற்பு மிக்க இடமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் உணவுப் புகைப்படங்களைப் பகிர்வதில் காட்டிய ஆர்வம், மெதுவாக மக்கள் அவரிடம் சமையல் குறிப்புகளைக் கேட்கத் தொடங்கியதும் ஒரு புதிய திசைக்குத் திரும்பியது. சமையலறையில் அவர் காட்டும் அன்பு, பாரம்பரியம் மற்றும் கதை சொல்லும் விதம் ஆகியவை இன்று அவரது சமையலறையைத் தாண்டி பலரையும் சென்றடைந்துள்ளது. குறிப்பாக இந்த ரமழான் காலத்தில், சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த உணவுகளால் அவரது பக்கம் நிரம்பி வழிகிறது.
ஜஸ்லாவின் சமையலறையில் ரமழான் மாதம் என்பது மிகவும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டது. வருடம் முழுவதும் இலங்கை வீட்டுச் சமையலைப் பகிர்ந்து வந்தாலும், இந்த புனித மாதம் ஒரு தனித்துவமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. “ரமழான் காலத்தில் உணவுக்கு ஒரு உணர்வுபூர்வமான முக்கியத்துவம் உண்டு. நீண்ட நேர நோன்பிற்குப் பிறகு, இஃப்தார் மேசையே முதல் வெகுமதியாக அமைகிறது.” என அவர் குறிப்பிடுகிறார். ஸஹர், இஃப்தார் மற்றும் பெருநாள் கொண்டாட்டங்களுக்குத் தேவையான பலவிதமான தெரிவுகளைத் தனது பின்தொடர்பாளர்களுக்கு அவர் வழங்குகிறார்.
ஜஸ்லாவின் வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், கடினமானதாகவும் தெரிந்தாலும், அவற்றைச் செய்யும் விதம் மிகவும் எளிமையானது. “சமையல் என்பது ஒரு சலிப்பான காரியம் அல்ல, அதனை அனைவரும் அனுபவித்துச் செய்ய வேண்டும்.” என்பதே ஜஸ்லாவின் விருப்பம். பல ரசிகர்கள் அவரது குறிப்புகளைப் பார்த்து, சமையல் என்பது இவ்வளவு எளிதானதா என்று வியந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஜஸ்லாவின் ஒவ்வொரு உணவிற்குப் பின்னாலும் ஒரு தனிப்பட்ட கதை அல்லது நினைவு ஒளிந்து கிடக்கிறது. அவரது பாட்டியின் கஞ்சி (ரமழான் கஞ்சி), சவ்வரிசி கஞ்சி, கருப்பட்டி பால், வட்டலாப்பம் மற்றும் அவரது தாயின் முங் கெவும் போன்ற பாரம்பரிய உணவுகள் அவரது பக்கத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. “உணவு என்பது ஏக்கங்கள் மற்றும் குழந்தை பருவ நினைவுகளுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறுகிறார். புலம்பெயர்ந்து வாழும் பலருக்கு ஜஸ்லாவின் வீடியோக்கள் தமது சொந்த ஊர் மற்றும் குடும்ப நினைவுகளை மீட்டுத் தரும் ஒரு பாலமாக அமைகின்றன.
மூன்று பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு, குறிப்பாக இரட்டைப் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டு இவ்வளவு ஆக்கப்பூர்வமான பணிகளை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த வெற்றிப் பயணத்தில் அவரது கணவரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிபுணராக இருந்து, இந்தத் தளத்தின் வளர்ச்சிக்குத் தேவையான வியூகங்களை அவர் வகுத்துக் கொடுக்க, ஜஸ்லா தனது முழு கவனத்தையும் சமையல் மற்றும் வீடியோ உருவாக்கத்தில் செலுத்துகிறார்.
TikTok தளம் என்பது வெறும் காணொளிகளைப் பதிவிடும் இடமாக இல்லாமல், மக்களிடையே உரையாடல்களைத் தூண்டும் ஒரு சமூகமாக மாறியுள்ளதாக ஜஸ்லா கருதுகிறார். பார்வையாளர்களைத் தன்பால் ஈர்க்க அவர் காணொளிகளில் சிறிய விளையாட்டுகளையும், ஊடாட்டங்களையும் (Interaction) புகுத்துகிறார். உதாரணமாக, ஒரு ரகசியக் குறிப்பைப் பெற ‘ரகசிய வார்த்தையை’ கமெண்ட் செய்யச் சொல்லுதல் அல்லது நண்பர்களை Tag செய்ய ஊக்குவித்தல் போன்ற முறைகள் அவரது பக்கத்தை மிகவும் கலகலப்பாக மாற்றுகின்றன. இதன் மூலம் பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் உணவு, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியங்கள் ஊடாக ஒன்றிணைகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் நேர்மறையான உள்ளடக்கங்களைப் பகிர வேண்டியதன் அவசியத்தை ஜஸ்லா வலியுறுத்துகிறார். இணைய உலகம் சில நேரங்களில் குழப்பமாகத் தோன்றினாலும், படைப்பாளிகள் அர்த்தமுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் விடயங்களைப் பகிரும்போது அது ஒரு ஆரோக்கியமான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் என்பது அவரது நம்பிக்கை. எதிர்காலத்தில் இலங்கை சமையல் கலையையும், ரமழான் பாரம்பரியங்களையும் உலகிற்குத் தொடர்ந்து கொண்டு செல்வதே அவரது இலக்காகும். உணவு என்பது ஒரு உலகளாவிய மொழி என்றும், அதன் மூலம் மக்களிடையே அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்ப முடியும் என்றும் அவர் திடமாக நம்புகிறார். தனது பதிவுகள் ஒரு சிலரையாவது மீண்டும் தமது பாரம்பரிய உணவுகளுடனும் ரமழான் உணர்வுடனும் இணைக்க வைத்தால், அதுவே தனது வெற்றி என அவர் மனநிறைவுடன் குறிப்பிடுகிறார்.
